Sunday, May 13, 2012

கூடங்குளத்தில் அலாவுதீன் அற்புத விளக்கு!


தமிழகத்தில் 2 மணி நேர மின்சார வெட்டு என்றால் கூடங்குளம் போராட்டம்தான் காரணம் என்றீர்கள். அடுத்து 4 மணி நேர மின்சார வெட்டு என்றால் கூடங்குளம் போராட்டம்தான் காரணம் என்றீர்கள். அடுத்து 6 மணி நேர மின்சார வெட்டு என்றபோதும் அதே புராணம்தான். இன்று 8 மணி நேர மின்சார வெட்டு நடைமுறையில் இருக்கும்போதும் அதே கீறல் ரிக்கார்டுதான் ஓடிக் கொண்டிருக்கிறது. முதலில் இவர்கள் கூடங்குளத்தில் இருப்பது அணு உலையா அல்லது அலாவுதீனின் அற்புத விளக்கா என்பதை மக்களிடத்தில் விளக்க வேண்டும்.

கொஞ்சமும் அறிவியல் பார்வை இல்லாத இவர்கள் தமிழக மக்களை முட்டாள்கள் என்று நினைத்துதான் துணிச்சலாக இது போல் பேசுகிறார்கள். அதை விட இன்று கூடங்குளத்திற்கு ஆதரவாகப் பேசுவது என்பது, வருடம் எல்லாம் சகல திருட்டுகளில் ஈடுபட்டு சுதந்திர தினத்தன்று மூவர்ணக் கொடியை சட்டைப்பையில் குத்துவது போல் ஒரு போலி தேசியவாத நடவடிக்கையாகப் பரிணமித்துள்ளது. கிரிக்கெட் போட்டியில் கூப்பாடு போட்டு தேச பக்தியைத் தெரிவிப்பவர்களுக்கும் இவர்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

கூடங்குளம் அணு உலைக்கு எதிராகத் தமிழக அளவில் இருக்கும் இயக்கங்களின் பெரும் ஆதரவும், மக்கள் ஆதரவும் இருப்பதைக் கண்டு ஆளும் வர்க்கம் பல புதிய உத்திகளைக் கையாளத் தொடங்கியது. தமிழகத்தில் உள்ள ஊடகங்களிடம் கோடிக்கணக்கான ரூபாய் வைத்துப் பேரம் பேசும் படலத்தை முதலில் ஆரம்பித்தார்கள். அதில் நாம் அறிந்துள்ள வரை நூறு கோடிக்கு மேல் கைமாறியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐஸ்வர்யா ராய், அமீர் கான் ஆகியோர் நடித்த Ôகோக்Õ விளம்பரத்திற்கு அடுத்தபடியாக என்னைக் கவர்ந்தது சாந்தா அவர்கள் சமீபத்தில் நடித்த கூடங்குளம் விளம்பரம். எங்கேயோ தஞ்சாவூர் பக்கம் படப்பிடிப்பு நடத்தப்பட்டதாக ஊடக நண்பர்கள் தெரிவித்தார்கள். ஐஸ்வர்யா ராயும், அமீர் கானும் இந்த விளம்பரத்தில் நடிக்கும்போது ஒரு மடக்குக் கூட அந்த குளிர்பானத்தைக் குடிக்க மாட்டார்களாம், ஒவ்வொரு டேக்கிற்கும் அவர்கள் ஒரு மடக்கைத் தங்களின் வாயில் ஊற்றுவார்கள்; உடனே அதனை அருகில் இருக்கும் பாத்திரத்தில் துப்பிவிடுவார்களாம். அதே போலத்தான் சாந்தா, அப்துல் கலாம் நடிக்கும் இந்த விளம்பரங்களும். அணு உலையில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சினால் புற்றுநோய் குணமாகும் என்றால்  சென்னையில் இருக்கும் இந்தப் புற்றுநோய் மருத்துவமனையை முதலில் கூடங்குளத்திற்கு இடமாற்றம் செய்ய வேண்டும். ஏன் வீணாக மருந்துகளுக்கும், இயந்திரங்களுக்கும் நாம் சென்னையில் செலவழிக்க வேண்டும்.

அடுத்து உலகின் அனைத்து நாடுகளிலும் உள்ள அணுசக்தி ஒழுங்கு ஆணையத்தில்  அந்த நாடுகளில் உள்ள அறிவுஜீவிகள், மக்கள் விஞ்ஞானிகள்தான் இடம் பெற்றிருப்பார்கள். இந்தியாவில் மட்டும்தான் மக்களின் சார்பாக அணுசக்தி துறையை நெறிப்படுத்த வேண்டிய அந்த ஆணையத்தில் முழுவதும் அணு விஞ்ஞானிகளும், அரசுசார் புரோக்கர்களும் நிரம்பி வழிகிறார்கள். அதிலும் இங்கிருந்து ஓய்வுபெற்ற பார்த்தசாரதிகளுக்குக் காலமெல்லாம் பொழுது போக்கிற்குப் பஞ்சமே இல்லை. அதில் ஒருவர்தான் மக்களின் வாழ்வுடன் சூதாடும் டாக்டர்.எம்.ஆர்.சீனிவாசன். அவர் நாடு அறிந்த அணு உலை ஆதரவாளர். இவரை சமீபத்தில் தமிழக அரசு ஏற்படுத்திய குழுவில் இடம் பெறச் செய்திருக்கிறார்கள்.

கோவையில் நடந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் அணுமின் நிலையம் தொடர்பான சந்தேகங்கள் இருந்தால் கேட்கலாம் என்று விஞ்ஞானி சீனிவாசன் கூறினார். உடனே அங்கிருந்த ஆய்வாளர் மருத்துவர் ரமேஷ் அவர்கள், “ கூடங்குளம் அணுமின் நிலையக் கட்டுமானப் பணிகள் தொடங்கும் முன், அந்த இடத்தில் எரிமலை பாதிப்பு மற்றும் சுனாமி குறித்த ஆய்வு நடத்தப்பட்டதா?” என்று கேட்டார். இதற்கு விஞ்ஞானி சீனிவாசன், Òஇப்படிக் கேள்வி கேட்டால் பதில் சொல்ல முடியாது. உங்களுக்கு சந்தேகம் இருந்தால் இ&-மெயிலில் கேள்வி அனுப்புங்கள். நான் பதில் அனுப்புகிறேன்” என்றார். “கலந்தாய்வுக் கூட்டம் என்று கூட்டம் நடத்தியதால்தான் நாங்கள் வந்துள்ளோம், அணு உலை தொடர்பான எங்களது சந்தேகங்களுக்குப் பதில் சொல்ல வேண்டியது விஞ்ஞானியான உங்களது கடமை” என்றார் மருத்துவர் ரமேஷ்.

இதனைத் தொடர்ந்து ஏராளமான கேள்விகள் கேட்கப்பட்டன. பதில் எதுவும் தெரியாததால் உடனே, விமானத்திற்கு நேரமாகிவிட்டது என்று அங்கிருந்து தப்பியோடினார் அணு விஞ்ஞானி சீனிவாசன். இப்படித் தப்பியோடிய ஒருவரைக் குழுவில் நியமித்திருப்பது இன்னும் நம் அச்சத்தை அதிகப்படுத்தியுள்ளது. அதை விட இந்த சீனிவாசன் 1984களில் கூடங்குளம் அணு உலை தொடர்பான இடத்தேர்வு குழுவில் இடம்பெற்றிருந்தார். சமீபத்தில் நவம்பர் 12, 2011 அன்று சென்னையில் பத்திரிகையாளர்களிடம் பேசிக் கொண்டிருந்த சீனிவாசன், தான் அந்தப் பகுதிக்கு 1984களில் சென்றிருந்தபோது  அந்தப் பகுதியில் ஒரு கிராமம் கூட இருக்கவில்லை என்றார். 

அங்கு பரந்து விரிந்த ஒரு கடற்கரை மட்டுமே இருந்ததாம். நூற்றாண்டுகளாக இடிந்தகரையும் கூடங்குளம் கிராமமும் பிரித்தானிய ஆவணங்களிலும் இந்திய அரசின் ஆவணங்களிலும் இருந்து வருகிறது. இதனை நெல்லை ஆட்சியர் அங்குள்ள ஆவணங்களின் அடிப்படையில் நிறுவும் பட்சத்தில் சீனிவாசன் அதனை ஏற்பாரா? பணம் வருகிறது என்றால் அதற்காக இந்திய நாட்டின் உயர் அதிகாரிகள் அனைவரும் பச்சைப் பொய்களைப் பகிரங்கமாகப் பேசத் துணிந்து விட்டனர் என்பதைப் பார்க்கிறோம் அல்லது இத்தனை பெரும் கிராமங்கள் இவர் கண்களில் படவில்லை என்றால் இவருக்குப் பெரும் பார்வைக் கோளாறு உள்ளது என்றுதான் பொருள் கொள்ள வேண்டும். அப்படிப் பார்வைக் கோளாறு உடையவர் எப்படி அணு உலையை ஆய்வு செய்து அது பாதுகாப்பாக இருக்கிறது என்று நமக்கு சான்றளிப்பார். அதே போல் நவம்பர் 15, 2011 அன்று மக்களின் பயங்கள் அனைத்தும் கற்பனையானவை என்றார் இதே சீனிவாசன்.
அடுத்து உதயகுமார் அவர்களுக்கு 1.5 கோடி ரூபாய் வெளிநாட்டில் இருந்து வந்துள்ளதாக பத்திரிகைகளில் பேசிய நவீன அணு விஞ்ஞானி நாராயணசாமி, உதயகுமாரின் வக்கீல் நோட்டீசைப் பார்த்ததும் - நான் அப்படிக் கூறவேயில்லை என்று அந்தர் பல்டி அடித்தார். இதனைத் தொடர்ந்து ரஷ்யத் தூதர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து விட்டதைப் போல் உள்ளூர் அரசியல் பேசினார். ஒரு தூதர் உள்நாடு விவகாரங்களில் இப்படித் தலையிடுவதை நாம் அனுமதிக்கலாமா?

இதே வேளையில் ஹரியானாவில் விவசாயிகள் கடந்த 700 நாட்களுக்கு மேல் நடத்திய போராட்டம் வெற்றி பெற்றது. அரசாங்கம் ஏக்கருக்கு 32 லட்சம் ரூபாய் அறிவித்ததும் விவசாயிகள் உன்ணாவிரதப் பந்தலை விட்டு ஓடி வருவார்கள் என்ற அவர்களின் கனவு பலிக்கவில்லை. ஒரு விவசாயி கூட தன் நிலத்தை விற்க முன்வரவில்லை என்பது வரலாறு. அடுத்து மகாராஷ்டிராவின் ஜைத்தாபூர் போராட்டத்தைப் புது விதமாகக் கொச்சைப்படுத்தி வருகிறது மத்திய அரசு. அங்கு இருக்கும் போராட்டக்காரர்களின் பின்னணியில் இஸ்லாமிய நாடுகள், இஸ்லாமியப் பணம் இருப்பதாக அங்குள்ள நாளிதழ்கள் கவர் பெற்றுக் கொண்டு கச்சிதமாகத் தங்களின் வதந்தி தொழிற்சாலையை இயக்கி வருகின்றன. ஜைத்தாபூர் பகுதியில் உள்ள சில இஸ்லாமியக் கிராமங்கள் போராட்டத்தில் பலமாக இருப்பதால் அங்கு இந்த இஸ்லாமியப் பணம் பற்றிய கதை சக்கைப் போடு போடுகிறது. இன்னும் பணிய மறுத்தால் இருக்கவே இருக்கிறது இஸ்லாமிய தீவிரவாதம் கதை. உடனே அந்த ரீலை எடுத்துப் படத்தை பலமாக ஓட்டலாமே. ஜனங்களை அவமதிக்க புதிய புதிய வழிகள். இதேபோல் மக்கள் ஆந்திராவின் கோவாடாவிலும், கர்நாடக கோகோயிலும், குஜராத்தின் மீதிவீதியிலும் போராடி வருகிறார்கள். மேற்கு வங்காளத்தில் வரவிருந்த ரஷ்ய அணு உலையை விரட்டிய மம்தா மட்டும் அந்த வெளிநாட்டுப் பணத்தை வைத்து என்ன செய்தார் என்று ஒரு ஊடகமும் எழுத மறுக்கிறது.

சமீபத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் 8 மணி நேர மின்சார வெட்டிற்கான காரணங்கள் வேறு. அதனை மறைக்கவே அரசு கூடங்குளத்தைக் கை காட்டி வருகிறது.  தமிழகத்தின் ஐந்து தனியார் உற்பத்தி நிலையங்களில் நான்கு நிலையங்கள் அதன் உற்பத்தியை முடக்கிவிட்டன; இந்த நிலுவைதான் மின்வெட்டு 8 மணி நேரமாக வளரக் காரணமாம். முதல்வர் அவர்கள் 5995 கோடி ரூபாயை புதிய உற்பத்தி நிலையங்களுக்கு ஒதுக்கிய நாளிலிருந்து இந்த உற்பத்தி முடக்கம் தொடங்கப்பட்டிருக்கிறது. இவர்கள் அந்த மொத்த நிதியைத் தாங்களே பங்கு போட்டு விடலாம் என்று திட்டமிட்டிருந்தனர்.

 ஜி.எம்.ஆர்.வாசவி - 196 MW, பிள்ளை பெருமாநல்லூர் - 330.5 MW, மதுரை பவர் - 106 விMW, சாமல்பட்டி பவர் - 105.66 MW. பத்தாண்டுகளுக்கு மேலாக வாரியத்துடன் வணிகம் நடத்திய இவர்கள் சம்பாதித்தது இவர்களின் மூலதனத்தைப் போல் 250% (சதவீதம்). அரசின் சலுகைகளோ (சுங்க வரி, வருமான வரி, விற்பனை வரி, ஸ்டாம்ப் கட்டணம் முதலியன) மூலதனத்திற்கு சமம். புதிய உற்பத்திக்கு அரசு ஒதுக்கிய பணத்தை தங்களுக்குப் பங்கு வைக்கக் கோரி தமிழக மக்களைப் பிணையாக்கியிருக்கிறார்கள் இந்த நால்வரும். உற்பத்தி நிறுத்தியிருக்கும் இந்த நாட்களிலும் இவர்களுக்கு வாரியம் கட்டணம் செலுத்த வேண்டும். ஒரு நாளைக்கு ஜி.எம்.ஆர். - 51 லட்சம், பி.பி.என்.- 94 லட்சம், மதுரை பவர் -21 லட்சம், சாமல்பட்டி - 27 லட்சம். மொத்தத்தில் 2.01 கோடி. நெய்வேலியின் எஸ்.டி.சி.எம்.எஸ்.  மட்டும் உற்பத்தி செய்கிறது. கோடையும் கூட சேர்ந்து மின் பளுவைக் கூட்டுகிறது. இதுதான் காரணம். நான்கு நிறுவனங்கள் தமிழக மக்களை வஞ்சிக்க விடுவது சரியா? உற்பத்தி திறனிருந்தும் மக்களை இருட்டில் தத்தளிக்க வைப்பது முறையா?

அதிகார வர்க்கம் காலகாலமாக இது போன்ற போராட்டங்களைத் தன் அவதூறுகளால் , பண பலத்தால், ஊடக பலத்தால், தந்திரங்களால் தான் சந்தித்துள்ளது, அது உண்மையான பிரச்சினையின் காரணங்களைக் கொண்டு நேருக்கு நேராகச் சந்தித்ததில்லை. பிப்ரவரி 26 சென்னை மாநாடு, மார்ச் 18 சங்கரன்கோவில்  இடைத்தேர்தலும் இந்தப் போராட்டத்தின் வரலாற்றை மாற்றி அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூடங்குளம் அணு உலை செயல்படத் தொடங்கிவிட்டால் உடனடியாகத் தமிழகம் நியூயார்க்காக மாறிவிடும் என்று சரடு விடும் அன்பர்களுக்கு சில விஷயங்களைத் தெளிவு படுத்த வேண்டும். இந்தியாவின் எந்த அணு உலைக்கும் PLF (Plant Load Factor) என்பது 40 சதவீதத்திற்கு மேல் இல்லை. இது ஒரு நவீன உலை என்பதால் அதனை நாம் ஒரு 70 சதவீதம் ஆக ஒப்புக்கொள்வோம். அப்படி என்றால் 1000MW. என்றால் அதில் இருந்து 700 MW என்பது வெளிவரும். இதில் ஒரு உலையை இயக்கவே இதில் 75 MW.செலவாகிவிடும். அதாவது 625 MW தான் உலை காம்பவுண்டை விட்டு வெளியேறும். இதில் தமிழகத்தின் பங்கு என்பது 45 சதவீதம் மட்டுமே. அதாவது 281 MW. இதில் இந்தியாவில் உள்ள Transmission, Distribution Losses என்பது 35 சதவீதம். அதாவது... கொஞ்சம் இதை நீங்களே கணக்குப் பார்த்துக் கொள்ளுங்கள். ப்ளீஸ்...
-அ. முத்துக்கிருஷ்ணன்

நன்றி: உயிர்மை, மார்ச் 2012

Thursday, April 19, 2012

கூடங்குளம் போராட்டம் - 55795 பேர் மீது வழக்கு, 6800 பேர் மீது தேசத்துரோக வழக்கு!


ஜனநாயக முறையில் நடத்தப்படும் அணுசக்திக்கு எதிரான போராட்டத்தின் மீதான தமிழக அரசின் அடக்குமுறைகள் குறித்த உண்மை அறியும் குழுவின் அறிக்கை

 உண்மை அறியும் குழுவினர் : சாம் ராஜப்பா, முனைவர்.க்ளாட்ஸ்டன் சேவியர், மகாதேவன், இராஜன், வழக்கறிஞர் பொற்கொடி.

கூடங்குளம் போராட்டத்திற்கான சென்னை ஆதரவு குழு

ஏப்ரல் 2012

அறிமுகம்:

19 மார்ச் 2012 அன்று கூடங்குளம் அணு உலையைத் திறப்பதற்கு தமிழக முதல்வர் அனுமதி அளித்தார். இம்முடிவினை தொடர்ந்து,சங்கரன்கோவில் இடைத்தேர்தலுக்காக பாதுகாப்பு பணியாற்றிய ஆயிரக்கணக்கான காவல் துறையினர் அனைவரும் கூடங்குளம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளுக்கு உடனே அனுப்பப்பட்டனர்.

ஒரு சிறிய மீனவ கிராமமான இடிந்தகரையில், இந்து மற்றும் கிறித்தவ மக்கள் பெருமளவில் வசித்து வருகின்றனர். ஆகஸ்ட் 2011 தொடங்கி பெருவாரியான அணு உலை எதிர்ப்புப் போராட்டம் இங்கு தொடர்ந்து நடந்து வருகிறது. கடந்த 7 மாதங்களில் மட்டும் அணு உலை எதிர்ப்பு போராட்டக்காரர்கள் பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். போராட்டக்காரர்கள் மீது கல் எறிவது, அவர்களின் வாகனங்களை சேதப்படுத்துவது என்று பல வகையான வன்முறைகள் கட்டவிழ்த்தப்பட்டன. எனினும் போராட்டக்காரர்கள் அகிம்சை வழியில் சனநாயக முறைக்கு உட்பட்டு உண்ணாவிரதம், தர்ணா மற்றும் சாலை மறியல் மூலம் மத்திய அரசு மற்றும் அதன் அறிவியல் அறிஞர்களின் பொய் பிரச்சாரத்திலிருந்து அணு உலை எதிர்ப்பு போராட்டத்தை உயிர்ப்புடன் வைத்திருந்தனர்.

 கூடங்குளம் மற்றும் போராட்டம் நடக்கும் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 7000 ஆயுதம் தாங்கிய தமிழக காவல்துறையினர் மற்றும் மத்திய காவல் படையினர் மார்ச் 23, 2012 வரை நிறுத்தப்பட்டிருந்தனர். இதில் கடலோர காவல்படையும் அடங்கும். இவர்கள் சுற்றி வளைத்துள்ள பகுதிகளில் சுமார் 10,000 பொது மக்கள் வசித்து வருகின்றனர். இதில் 946 முதியவர்கள், 1500 குழந்தைகள் மற்றும் 5 வயதுக்கு உட்பட்டவர்கள் 715 பேர்.

இடிந்தகரைக்கு அருகில் உள்ள  கூத்தன்குழி என்னும் ஊரும் இதே போல் காவல்படையினரால் சுற்றி வளைக்கப்பட்டிருந்தது. இதில் 553 பேர் தொடக்க பள்ளி செல்லும் குழந்தைகள், 5 வயதுக்கு உட்பட்டவர்கள் 198 பேர் மற்றும் 462 முதியவர்கள்.

இடிந்தகரை மக்கள் குடி தண்ணீர், மருந்து மற்றும் எரிபொருள் போன்ற அத்தியாவசிய தேவை பொருட்கள் வெளியூரிலிருந்தே பெற்று வந்தனர். ஒரு நாளைக்கு சுமார் 50 லாரிகளில் தண்ணீர் கொண்டு வரப்பட்டு ஒரு குடம் ரூ2.50க்கு பெற்று வந்தனர். தமிழக முதல்வரின் அணு உலைத் திறப்பு உத்தரவினைத் தொடர்ந்து ஒரு டாங்கர் லாரியும் இடிந்த்தகரைக்கு உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை.இடிந்தகரை செல்லும் எல்லா சாலைகளும் காவல் துறையினரால் மூடப்பட்டதால் பால், தண்ணீர், உணவு மற்றும் எரிபொருள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் கூட இடிந்தகரை உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. மார்ச் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் ஊடகங்களுக்கும் (NDTV, Headlines Today, Puthiya thalaimurai) உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. ஒட்டுமொத்த பொது மக்களின் அழுத்தத்தினால் பின்னர் இந்த ஊடகத்தடை விலக்கிக்கொள்ளப்பட்டது.

அருகாமையில் உள்ள கிராமங்களில், கடை வியாபாரிகளை இடிந்தகரை, கூத்தன்குழி கிராம மக்களைப் புறக்கணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டு இருந்தனர். காவல்துறையின் பதிலடி அச்சத்தின் காரணமாய்பெரும்பானமையான கடை வியாபாரிகள், இடிந்தகரை கிராம மக்களுக்கு பொருட்களை விற்க மறுத்து இருந்தனர்.

திருச்செந்தூரில் இருந்து  கூத்தன்குழி செல்லும் வழியாக உள்ள அனைத்து மீனவ கிராமங்களுக்கு செல்லும் சாலைகளும் மூடப்பட்டன. இதனால் மக்கள் கடல் வழியாக பயணிக்க வேண்டியதாயிற்று.

அணு உலை எதிர்ப்பு போராட்டத்தின் பெரும் பங்கு இடிந்தகரைப் பெண்களைச் சார்ந்துள்ளது.மிழஅரசு கூடங்குளம் ணியாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்கவே, இந்தஆயதக் காவல் படை முற்றுகை என்று விளக்கம் அளித்தாலும், தொடர்ச்சியானநிகழ்வுகளை உற்று நோக்கினால் க்கு புலப்படுவது ஒன்றுதான். ங்கள் உரிமைக்காகவும் வாழ்வாதாரத்திற்காகவும் அரசாங்கத்தை எதிர்த்து போராடும் க்கள் மீது ன்முறையை ட்டவிழ்த்து அவர்களை ஒடுக்குவற்கே என்னும் உண்மை புலப்படும்.

உண்மை அறியும் குழு:

கூடங்குளம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் போடப்பட்ட ஊரடங்கு உத்தரவினால் ஏற்பட்ட பாதிப்புகளை அறிய கீழே கொடுக்கப்பட்ட நபர்களை உள்ளடக்கிய உண்மை அறியும் குழு ஒன்று 30,31 மார்ச் 2012 அன்று கூடங்குளம் அணு உலையை சுற்றி உள்ள பகுதிகளை சென்று பார்வையிட்டது.

·         திரு.சாம் ராஜப்பா, மூத்த பத்திரிக்கையாளர், மற்றும் கொல்கத்தாவில் இயங்கும் ஸ்டேட்ஸ்மேன் அச்சு ஊடகத்திற்கான பள்ளியின் நிர்வாக இயக்குனர்.

·         திரு.கிளாட்சன் சேவியர்,மூத்த விரிவுரையாளர்,லயோலா கல்லூரி

·         திரு.மகாதேவன்,தலைவர்,PUCL,கன்னியாகுமரி மாவட்டம்

·         திருமதி.பொற்கொடி,வழக்கறிஞர்,உயர் நீதிமன்ற கிளை - மதுரை

·         திரு.இராஜன், PUCL,கன்னியாகுமரி மாவட்டம்

முதல் நாள்  (30 மார்ச் 2012) -

அணு உலையை எதிர்த்து ஜனநாயக வழியில் போராடும்  பல்வேறு கடற்கரை கிராமங்களில் இருந்து சுமார்  5000 மக்கள் திரண்டிருந்த இடிந்தகரை கிராமத்தைக் குழு சென்று பார்வையிட்டது. ஊரடங்கு நடைமுறையில் இருந்த காலத்தில் எதிர்கொண்ட பிரச்சினைகளை பற்றி மக்களிடம் கேட்டு அறிந்தது. போராட்ட ஒருங்கிணைப்பு குழுவினை சேர்ந்த திரு.சு..உதயகுமார் மற்றும் திரு.புஷ்பராயன் அவர்களையும் சந்தித்தது.
21 மார்ச் 2012 அன்று அடையாளம் தெரியாத மர்ம் நபர்களால் அடித்து உடைக்கப்பட்டு, கடுமையான சேதத்திற்கு உள்ளான, திருமதி.மீரா உதயகுமார் (திரு.சு..உதயகுமார் அவர்களின் துணைவியார்) அவர்களால் நாகர்கோவிலில் நடத்தப்படும் SACCER என்ற பள்ளியை குழு சென்று பார்வையிட்டது

இரண்டாம் நாள் (31 மார்ச் 2012)

அணு உலையிலிருந்து சுமார் 700 மீட்டர் தொலைவில் இருக்கும்,சுனாமி புனர்வாழ்வு குடியிருப்பு பகுதியான காசா (Cஆஸா) நகருக்கு சென்று அங்கு வாழும் மக்களிடம் கலந்துரையாடியது. உண்மை அறியும் குழு பின்னர் கூடங்குளம் சென்று, கிராம மக்களின் கருத்துகளை பெற்றது.

பிறகு, உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞரான திரு.பிரஷாந்த் பூசன் அவர்களுடன் இணைந்து, திருநெல்வேலி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் திரு.விஜயேந்திர பிதாரி அவர்களை நேரில் சந்தித்து விளக்கங்களைப் பெற்றது.

உண்மை அறியும் குழுவின் பதிவுகள்:

திருநெல்வேலி மாவட்டத்தில் கூடங்குளம் அணு உலை அமைந்துள்ள இராதாபுரம் தாலுக்கா பகுதியில் 144 தடையுத்தரவு இருப்பினும் மூன்றாயிரத்திலிருந்து, நான்காயிரம் மக்கள் வரை இடிந்தகரையிலுள்ள லூர்து தேவாலயத்தில் கூடி வருகின்றனர். இங்கு தான் கடந்த ஐந்து மாதங்களாக தொடர் உண்ணாவிரதம் நடைபெற்று வருகின்றது. போராட்டக்காரர்கள் தொடர்ந்து கடுமையான காந்தீய ரீதியிலான அமைதி வழி போராட்டமுறைகளையே பின்பற்றிவருகின்றார்கள்.

மாநில அரசினால் நடத்தப்படும் மதுபான கடைகளைத் தவிர்த்து மற்ற எல்லா கடைகளும் எல்லா கிராமங்களிலும் அடைக்கப்பட்டே இருந்தன. போதுமான நுகர்வோர் இல்லாததால் மதுபானங்கள் சலுகை விலைகளில் வழங்கப்பட்டுவருகின்றது. மற்ற கடைக்காரர்களை எல்லாம் கடையைத் திறக்கும் படி காவல்துறை வற்புறுத்தியும் கூட அவர்கள் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக கடையை மூடியே வைத்துள்ளார்கள். அதே போல இயல்பு வாழ்க்கை திரும்பி விட்டதாக காட்டுவதற்காக மீனவர்களும் மீன் பிடிக்கச் செல்ல வற்புறுத்தப்படுகின்றார்கள், ஆனால் அவர்கள் ஒத்துழைக்க மறுத்துவிட்டார்கள்


அரசு இக்கிராமங்களுக்கு செல்லும் குடிநீர், பால் போன்ற அத்தியாவசிய பொருட்களை தடுத்து வருகின்றது. குடிநீர் கொண்டு செல்லும் சுமையுந்துகளை தடுப்பதற்கு சாலைகளில் போராட்டக்காரர்கள் தடையை ஏற்படுத்தியுள்ளார்கள் என்கிறது அரசு. ஆனால் இந்த கற்களும், மற்ற பொருட்களும் எவர் ஒருவராலும் எளிதில் அகற்றக்கூடியவையாகும். அரசு கூறும் "சாலைத் தடைகளைத்" தாண்டி எங்கள் மகிழுந்து மிக எளிமையாக இக்கிராமங்களுக்குள் சென்றது. மேலும் அரசு இப்பகுதியில் பேருந்து போக்குவரத்தையும் துண்டித்துள்ளது, இதனால் முதியவர்களும், நோய்வாய்ப்பட்டவர்களும், கர்ப்பிணி பெண்களும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

அணு உலை எதிர்ப்பு போராட்டம் நடக்கும் இடிந்தகரை பகுதியை நெருகிய பொழுது ஒலிப்பெருக்கிகளின் சத்தம் எங்கள் காதைப்பிளந்தது. பத்து வயதிற்கும் குறைவான ஆறு அல்லது ஏழு சிறுவர்கள் ஒலிவாங்கியின்(Mஇகெ) முன் நின்று கொண்டிருந்தார்கள். எப்படி அந்த வயது குழந்தைகள் பள்ளிக்கூட பாடல்களை கூறுவார்களோ அதே போல "மீண்டும், மீண்டும் நாங்கள் எழுவோம், ஒரு புதிய கலாச்சாரத்தை உருவாக்குவோம். இயற்கை எங்களது அன்னை. அதை அழிப்பதற்கு உங்களுக்கு எந்த உரிமையுமில்லை" என்று தமிழில் இணைந்து கூறினார்கள். மற்றொரு குழந்தைகள் குழுவோ வெகு வேகமாக எதையோ எழுதிக்கொண்டிருந்தார்கள். நீங்கள் என்ன வீட்டுப்பாடங்களையா எழுதிக்கொண்டிருக்கின்றீர்கள் என்ற கேட்டதற்கு மிக அலட்சியமாக எங்களை பார்த்த அவர்கள், வாழ்விற்கும் சாவிற்கும் இடையிலான இந்தப் போராட்டத்தில் பங்குகொள்வதற்காக நாங்கள் பள்ளி செல்வதை நிறுத்தி பலநாட்களாகிவிட்டது என்றும், நாங்கள் அடுத்தடுத்த முழக்கங்களை எழுதிக்கொண்டிருக்கின்றோம் என்றும் கூறினார்கள். இதே போல மற்றுமொரு குழந்தைகள் குழு மாலை நடைபெறவிருக்கும் நாடகத்திற்கான திரைக்கதையை எழுதிக்கொண்டிருந்தார்கள். அணு உலையினால் ஏற்படும் தீமைகள் பற்றி அவர்கள் கொண்டிருந்த ஞானம் அவர்களுடன் பேசிக்கொண்டிருக்கும்  பொழுது எங்களுக்கு தெளிவாகியது.

தேவாலயத்தை ஒட்டிய கடற்கரையில் வரிசை, வரிசையாக பைபர் படகுகள் நிறுத்தப்பட்டிருந்தன.மக்களது அச்சத்தை போக்கும்வரை அணு உலை செயல்படக்கூடாது எனக்கூறிய தமிழக முதல்வர் ஜெயலலிதா இவர்களது காலைவாரி அணு உலை செயல்படுவதற்கான ஆணை வழங்கியதில் இருந்து இங்குள்ள மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்வதில்லை. முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமோ, மாநில அரசு அமைத்த நிபுணர் குழுவோ அணு உலையின் பாதுகாப்பு பற்றிய மக்களது கேள்விகளுக்கு பதில் சொல்ல இடிந்தகரைக்கு வரவேயில்லை என்று தேவாலயப்பகுதியில் குழுமியிருந்த மீனவர்கள் கூறினார்கள்.

நாங்கள் மீனவர்களிடம் பேசிக்கொண்டிருந்த பொழுது, மற்றொரு குழந்தைகள் குழு ஒலிவாங்கியின் முன்னால் வந்து நின்றார்கள். " அம்மா, அம்மா என உன்னை அழைத்தோம், நீயோ எங்களை அனாதைகளாக்கிவிட்டாய்கலாம் ஐயா, கலாம் ஐயா அணு உலை பாதுகாப்பைப் பற்றி பேச நீங்கள் யாரய்யா? என்ற அவர்களது முழக்கம் "நாராயண சாமியே உனது வாயை நீ மூடு" என்பதுடன் முடிவடைந்தது. இந்த குழந்தைகள் எல்லாம் வயதானவர்களாலோ, அல்லது போராட்டக்குழு தலைவர்களான சுப.உதயகுமார், புஷ்பராயனாலோ பயிற்சி அளிக்கப்பட்டவர்கள் அல்ல. தங்களது குழந்தைகள் கூறும் பல்வேறு முழக்கங்களை கேட்டுக்கொண்டே அங்கே குழுமியிருந்த பெண்கள் பீடி சுற்றிக்கொண்டிருந்தார்கள். 1000 பீடிக்களை சுற்றினால் 60 ரூபாய் கிடைக்கும் என அந்த பெண்கள் கூறினார்கள். ஆண்கள் மீன்பிடித்தலை தற்சமயம் நிறுத்திவிட்டதால், குடும்பத்தை இந்த சொற்ப வருமானத்தைக்கொண்டு அவர்கள் நடத்திவருகின்றார்கள். நாங்கள் தேவாலயத்திலிருந்து அடுத்த கிராமத்திற்கு செல்லும் பொழுது ஒலிவாங்கியின் முன்னிருந்த சிறுவர்களது குரல்கள் மிகவும் சத்தமாக ஒலிக்கத் தொடங்கியது. இவர்களது குரல்கள் பிரதம மந்திரிக்கு கேட்ப்பதில்லையா என்று நாங்கள் கேட்கத் தொடங்கிய பொழுது "ஆலை மூடப்படும் வரை நாங்கள் போகமாட்டோம், போகமாட்டோம், பள்ளிகளுக்கு போகமாட்டோம்" என்ற அவர்களது குரல் தூரத்தில் ஒலிக்கத்தொடங்கியது.

நாங்கள் சென்ற முதல் நாளன்று அருகில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சின்ன முட்டம் பகுதி மீனவர்கள் போராட்டக்காரர்கள் தங்களது ஆதரவை அணு உலை எதிர்ப்பு போராட்டத்திற்கு தெரிவிப்பதற்காக தொடர் உண்ணாவிரதத்தில் வந்து கலந்து கொண்டனர். அவர்கள் மாலை அங்கிருந்து செல்லும் முன்பு தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டத்திற்கு தங்கள் அடையாள பங்காக ரூபாய் ஒரு இலட்சத்து இருபத்தைந்தாயிரம் ரூபாயை போராட்டக்குழுவிடம் கொடுத்தனர். இது போன்ற பங்களிப்புகளினால் தான் இந்த போராட்டம் தொடர்ந்து நடைபெறுகின்றதே தவிர, மத்திய அரசும், அமைச்சர் நாராயணசாமியும் கூறுவது போல வெளிநாட்டு நிதியினால் அல்ல.

CASA என்ற கத்தோலிக்க அரசுசாரா அமைப்பினால் ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்டவர்களூக்காக கூடங்குளத்திற்கும், இடிந்தகரைக்கும் இடையில் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ள 450 வீடுகளைப் பார்த்தோம். முழுவீச்சில் வேலைகள் நடந்துகொண்டிருக்கும் அணு உலையிலிருந்து 500 மீட்டருக்கும் குறைவான தூரத்தில் இருக்கும் இக்குடியிருப்புகள் கட்டுவதற்காக இந்த இடத்தை 2006ல் தேர்ந்தெடுத்தது திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர். போராட்டக்குழுவின் நம்பிக்கையைப் போல மாவட்ட ஆட்சியரும் இந்த அணு உலை எந்த ஒரு கட்டத்திலாவது நிறுத்தப்படலாம் என எண்ணியிருப்பாரோ. இல்லையென்றால் அணு உலைக்கு இவ்வளவு அருகில் ஒரு குடியிருப்புக்கான இடத்தை மாவட்ட ஆட்சியர் தேர்ந்தெடுத்திருக்க மாட்டார்கெடு வாய்ப்பாக அணு உலை செயல்படத்தொடங்கி விட்டால் இக்குடியிருப்பில் உள்ள 20,000 மக்களும் வீட்டைக் காலி செய்துவிட்டு வெளியேற வேண்டியது தான்.

நாங்கள் அங்கு தங்கியிருந்து விசாரணை செய்த இரண்டு நாட்களிலும் திரு.உதயகுமாராலோ அல்லது வேறு ஒரு தலைவரால் மட்டுமே இந்த போராட்டம் நடத்தப்படுகின்றது என்பதற்கான எந்த ஒரு சான்றையும் பார்க்கவில்லை. இது ஒரு உண்மையான மக்கள் போராட்டம். மக்கள் அதிகம் படித்தவர்களாக இல்லாத காரணத்தினால் திரு.உதயகுமார் போன்றோர் அந்த மக்களின் உணர்வுகளை அரசிடமும், மற்ற நிர்வாகங்களிடமும் சரியான முறையில் எடுத்துச்செல்வதற்கான உதவி வருகின்றார்கள். சட்டத்தின் எல்லா வழிகளையும் பயன்படுத்தி அரசு திரு.உதயகுமாரின் மீது 96 பொய் வழக்குகளை பதிவு செய்து கைது செய்யமுடியும் என முட்டாள்தனமாக நம்பிக்கொண்டிருக்கின்றது. காவல்துறை திரு.உதயகுமாரை கைது செய்யும் அந்த நொடியில் அமைதியாக நடந்து வரும் இப்போராட்டம் வன்முறையான ஒன்றாக மாறக்கூடிய எல்லா சாத்தியக்கூறுகளும் அங்கு தெரிகின்றது. 10-9-2011 முதல் 29-12-2011 வரை மட்டும், 107 முதல் தகவல் அறிக்கைகளை 55795 நபர்கள் மீதும் மற்றும் பலரின்மீதும் காவல் துறை பதிவு செய்திருக்கிறது. அவற்றில், 6800 பேர் மீது தேசதுரோகம்மற்றும்/அல்லது "தேசத்திற்கு எதிராக போர் தொடுத்தல்" ஆகிய குற்றச்சாட்டின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலும் அல்லது இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னும்கூட ஒரே காவல் நிலைத்தில் இத்தகைய வழக்குகள் இத்தனை பெரிய எண்ணிக்கையில் பதிவு செய்யப்பட்டது இதுவே முதல் முறையாக இருக்கலாம். இது சட்டத்தை கேலிக்கூத்தாக்கும் செயலாகும். அமைதியான வழியில் ஜனநாயகமுறையில் போராடும் மக்கள் மீது இத்தகைய வழக்குகளை காவல்துறை பதிவு செய்வது, எதிர் கருத்துக்களை நசுக்குவதற்குதானே தவிர, சட்டத்தின் ஆட்சியை நடைமுறைப்படுத்துவதற்காக அல்ல.

செல்வி ஜெயலலிதா அணு உலைக்கு பச்சைக் கொடி காட்டிய நாளிலிருந்து 5000 காவல் துறையினரும், துணை காவல்துறை ஆணையர் முதற்கொண்டு திரு.உதயகுமாரை கைது செய்யும் கட்டளையுடன் காத்துக்கொண்டிருக்கின்றார்கள். லூர்து தேவாலயத்தில் கூடியிருக்கும் 7000 மக்களும் மிகத்தெளிவாக கூறிவிட்டார்கள், ஆண்கள், பெண்களாகிய எங்கள் அனைவரையும் கைது செய்துவிட்டு கடைசியாக திரு.உதயகுமாரை நீங்கள் கைது செய்யுங்கள் என்று, இதனால் மிக மெதுவாக தங்கள் நடவடிக்கையை எடுக்க காவல்துறை நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது.

திரு.உதயகுமார் அவர்களை கைது செய்யமுடியாத இயலாமையால், அவரது மனைவி திருமதி. மீரா அவர்கள் நடத்தி வரும் பள்ளிக்கூடத்தையும், அதன் நூலகம், பள்ளிக்கூட மேசை, இருக்கைகள் அனைத்தையும்  அடித்து நொறுக்கியும், சுற்றுப்புறச்சுவரை இடித்தும் உள்ளார்கள். இந்த பள்ளிக்கூடம் இங்கிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் நாகர்கோயிலில் இருக்கின்றது. இதுபோன்ற துன்புறுத்தல்களால் எல்லா வகையான அமைதியான வழிகளிலும் போராட்டத்தை வலுப்படுத்தும் அவரது எண்ணம் மேலும் அதிகமாகிவருகின்றது.